×

பூ மழை தூவி உற்சாகம் போலீஸ் எஸ்பிக்கு வித்தியாசமான வழியனுப்பு விழா: குஜராத் மக்கள் ஆர்வம்

காந்திநகர்: போலீஸ் எஸ்பி ரவி தேஜா இடமாற்றம் செய்யப்பட்டதால் அவரை மக்கள் பூமழை தூவி வழியனுப்பி வைத்தனர். ஆந்திர மாநிலம் அமலாபுரத்தை சேர்ந்தவர் ரவி தேஜா. ஐபிஎஸ் அதிகாரியான இவர் குஜராத் மாநிலம் ஜூனா கட்டில் எஸ்பியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திடீரென இடமாற்றம் உத்தரவு வந்தது. ஜூனாகட்டில் இருந்து எஸ்பி ரவிதேஜா அங்குள்ள காந்திநகருக்கு மாற்றப்பட்டார். இதனால் ஜூனா கட் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் நேர்மை, கடின உழைப்பு, குற்றங்களை குறைத்தது, பொதுமக்களின் நண்பனாக போலீஸ் பணியை மாற்றியது உள்ளிட்ட ரவிதேஜாவின் பல்வேறு நடவடிக்கையால் ஜூனாகட் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக மாறியது.

இருப்பினும் அவருக்கு காந்திநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் அவரை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் அமர வைத்து முதலில் எஸ்பி அலுவலகத்தில் இருந்து போலீசார் பாரம்பரிய முறைப்படி இழுத்து வந்தனர். எஸ்பி அலுவலகத்திற்கு வெளியே அவரை காண ஏராளமான மக்கள் நீண்ட தூரம் வரிசையாக திரண்டு நின்றனர். அவர் கார் பின்னால் ஏராளமான போலீஸ் வாகனங்கள் அணி வகுத்து வந்தன. மேலும் அவர் செல்லும் வழியெல்லாம் மக்கள் திரண்டு நின்று பூ மழை தூவி வழியனுப்பி வைத்தனர்.

அவர் நடந்து சென்ற போது பாதை முழுவதும், அவர் மேலும் மக்கள் பூமாரி பொழிந்தார்கள். அதை விட முக்கியமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையிலும், ஆன்மீக குருக்களும் ஆர்வமுடன் வந்து செல்பி எடுத்தனர். இந்த காட்சிகள் உருக்கமாக காணப்பட்டன. மக்களின் அன்பு மழையில் நனைந்த எஸ்பி ரவிதேஜா இருகரம் கூப்பி மிகவும் பணிவுடன் அவர்களின் அன்பு வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். இந்த வழியனுப்பு விழா இப்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

The post பூ மழை தூவி உற்சாகம் போலீஸ் எஸ்பிக்கு வித்தியாசமான வழியனுப்பு விழா: குஜராத் மக்கள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Flower Rain Sprinkle Enthusiasm ,Gujarat ,Gandhinagar ,Ravi Deja ,AP State ,Flower Rain Sprinkle Excitement ,SP Differentiated Route Festival ,
× RELATED குஜராத் மாநிலம் தாஹூத் மக்களவை...